
மலாக்கா, ஜூன் 27 – சமீபகாலமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த ‘யோ கோமென்’ கும்பலைக் கடந்த சனிக்கிழமை ஜாலான் தஞ்ஜோங் கிளிங்கிலுள்ள கண்டோமினியம் ஒன்றில் நடந்த அதிரடி சோதனையில் காவல்துறையினர் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர் என்று மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் முதல் இக்கொள்ளைச் சம்பவங்களில் அதிகம் ஈடுபட்ட, 35 முதல் 40 வயதுடைய மூவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் 6 கைத்தொலைபேசிகள், 2 தோள்பைகள், ஒரு இடுப்புப் பை மற்றும் சந்தேக நபருக்குச் சொந்தமான இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குள் அதிகாலை 1 மணி முதல் 4.30 மணி வரை பின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைவதே அக்கும்பலின் வழக்கமாக இருந்ததெனவும் ஒட்டுமொத்தமாக 9,200 ரிங்கிட் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. .
சிறுநீர் பரிசோதனையின் முடிவுகளில் கைதான ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளதென்றும் நாளை வரை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர், என்றும் கிறிஸ்டோபர் விளக்கமளித்துள்ளார்.