கோலாலம்பூர், மே-20 – சுகாதார மற்றும் ஆரோக்கியப் பராமரிப்புப் பொருட்கள் என்ற போர்வையில்
பிரபலங்களின் முகங்களைப் பயன்படுத்தி இணையத்தில் விற்கப்படும் போலி பொருட்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பிரபலங்களின் முகங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது ஒரு கலாச்சாரமாகவே ஆகி விட்டது.
சம்பந்தப்பட்ட பிரபலங்கள் தான் அப்பொருட்களைத் தயாரிப்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தி, மக்களை நம்ப வைத்து அவர்கள் காசு பார்த்து வருவதாக, புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை கூறியது.
ஆரோக்கியப் பொருள் எனக் கூறி மக்களுக்குக் கெடுதலை உண்டாக்கலாம் என ஐயுறப்படும் பொருளொன்றை விளம்பரப்படுத்த அனுமதியின்றி தனது புகைப்படமும் நிறுவனத்தின் பெயரும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக, சுகாதார நிபுணரும் சமூக ஊடக பிரபலமுமான ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
அது போன்ற நடவடிக்கைகள் சட்டத்திற்கு எதிரானவை; பிடிபட்டால் தண்டனை நிச்சயம் என புக்கிட் அமானின் Datuk Seri Ramli Mohamed Yoosuf எச்சரித்தார்.
பொது மக்களும், இணையத்தாலும் சமூக ஊடகங்களிலும் விளம்பரம் செய்பப்படும் பொருட்களை அப்படியே நம்பி வாங்கி விடாமல், சுகாதார அமைச்சின் வழிகாட்டியையும் ஆலோசனையையும் பின்பற்றுவது நல்லது என்றார் அவர்.