
பெண்டாங், ஏப்ரல்-19 – கெடா, பெண்டாங்கில் உணவங்காடிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய இரண்டு பெண்களை, பணியில் இல்லாத இரண்டு தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர்.
நேற்று மாலை 5.15 மணியளவில் பெல்டா சுங்கை தியாங் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
Muhammad Athir Maula Esaha மற்றும் Mohammad Anas Elyas ஆகிய இரண்டு தீயணைப்பு வீரர்களும் தற்செயலாக அந்த இடத்தில் உணவு வாங்கச் சென்றனர்.
அப்போது திடீரென ஒரு கடையில் தீப்பிடித்ததைக் கண்டனர்.
சமையல் எரிவாயு குழாய் கழன்றதால் ஏற்பட்ட இந்தத் தீ, கடையின் நுழைவு வாயிலை முழுமையாகத் தடுத்தது.
இதனால் உள்ளே இருந்த இரு பெண்கள் பீதியில் உறைந்து வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாகச் செயல்பட்ட அந்த தீயணைப்பு வீரர்கள், ஆபத்தையும் பொருட்படுத்தாமல் 2 பெண்களைப் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் அங்கிருந்த தீயணைப்பு கருவிகளைக் கொண்டு தீயையும் அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக இரு பெண்களும் இலேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
தீயணைப்பு வீரர்களின் இந்த வீரத்தீரச் செயலுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.



