
கோலாலம்பூர் – ஜூன் 12 – போதைப் பொருள் கடத்தல் இரண்டு போலி துப்பாக்கிகளை வைத்திருந்தது ஆகிய இரு குற்றச்சாட்டிகளிலிருந்து முன்னாள் அரசியல் ஆராய்ச்சி உதவியாளர் 32 வயதுடைய முகமட் யூசோப் ராவ்தரை ( Muhammed Yusoff Rawther ) தற்காப்பு வாதத்திற்கு அழைக்காமலேயே உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது. இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் வழக்கு விசாரணையின் முடிவில் அரசு தரப்பு குற்றங்களுக்கனா முகாந்திரத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது என்று கண்டறிந்த பின்னர் நீதிபதி டத்தோ முகமது ஜமீல் ஹுசின் ( Muhama Jamil Hussin ) யூசோப் ராவுத்தரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார். கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதியன்று காலை 10.15 மணிக்கு கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் சூராவ் முன் ஒரு வாகனத்தில் 305 கிராம் கஞ்சா கடத்தியதாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B(1)(a)யின் கீழ் இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. மேலும் அதே சட்டத்தின் 39B (2) யின் பிரிவின் கீழ் இக்குற்றம் நிருபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை மற்றும் 12 பிரம்படிகளுக்கு குறையாமல் தண்டனையை வழங்குகிறது. அதோடு கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம்தேதி காலை 9.25 மணிக்கு, ஜாலான் புக்கிட் கியாராவில் உள்ள ஒரு காண்டோமினியம் அருகே சாலையோரத்தில் இரண்டு போலி கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டையும் யூசோப் ராவ்தார் எதிர்நோக்கியிருந்தார். கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கிய விசாரணையில் 13 சாட்சிகளை அழைத்த பிறகு, வழக்கு விசாரணையை முடித்துவிட்டதாக அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞரான டிபிபி முகமட் சப்ரி ஓத்மான் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிவித்தார். கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரி இன்ஸ்பெக்டர் வான் முகமட் வான் அலி உட்பட பல அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையில் சாட்சியம் வழங்கினர். கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி யூசோப் ராவ்தர் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் விநியோக குற்றச்சாட்டை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதித்தது