போலி மருத்துவ விடுப்பு சான்றிதழ்களைத் தடுக்க ‘e-MC’ திட்டம்: சுகாதார அமைச்சு தீவிர ஆய்வு

கோலாலம்பூர், ஜூன்-21,
போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்கள் புழக்கத்தைத் தடுக்கும் நோக்கில், டிஜிட்டல் மருத்துவச் சான்றிதழ் முறையை (e-MC) செயல்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
முறைக்கேடுகளைத் தவிர்க்கவும், manual முறையை மாற்றி பாதுகாப்பான டிஜிட்டல் தளத்தை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
அண்மையக் காலமாக, தனியார் மருத்துவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்களின் தொழில்முறை பதிவு எண்கள் திருடப்பட்டு, போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக, உள்நாட்டுத் தரவுக் கசிவு ஏதேனும் உள்ளதா என்பதை அறிய, மலேசிய மருத்துவ மன்றம் (MMC) மற்றும் அமுலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிவதாக அவர் சொன்னார்.
பஹாங், பெக்கானில் தாதி ஒருவர் உட்பட 5 நபர்கள் போலி MC விற்பனை தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து Dr சுல்கிஃப்ளி அவ்வாறு கருத்துரைத்தார்.
அதோடு, 2016-ஆம் ஆண்டு முதல் மருத்துவர்கள் மற்றும் தனியார் கிளினிக்குகளின் பெயர்களைப் போலியாகப் பயன்படுத்தி வந்த Holiday Master என்ற இணையத்தள கும்பல் குறித்தும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.



