
சுபாங் ஜெயா , ஏப்-23-போலீஸ் சின்னம் பொறிக்கப்பட்ட மேலங்கி மற்றும் தலைக்கவசத்தை அனுமதியின்றி அணிந்திருந்த ஒரு நபரின் காணொளி டிக் டோக் செயலியில் வைரலானதைத் தொடர்ந்து அந்நபர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக நேற்று பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Superintendent முகமட் பைருஸ் ஜபார் ( Mohd Fairus Jaafar ) தெரிவித்தார்.
ஏப்ரல் 17 ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாகவும் , சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றப்படுவதற்கு முன்பு அந்த காணொளி பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
இதன் விளைவாக சுபாங் ஜெயாவின் யு.எஸ்.ஜே பகுதியில் கைது செய்யப்பட்ட அந்த நபர் விசாரணைக்கு உதவுவதற்காக தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் உபகரணங்கள் மற்றும் சீருடைகளை அனுமதியின்றி பயன்படுத்திய குற்றத்திற்காக, 1967 ஆம் ஆண்டு போலீஸ் சட்டத்தின் 89 ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் முகமட் பைருஸ் சுட்டிக்காட்டினார்.



