மகாராஷ்டிராவில் பரபரப்பு: கோவில் கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி; 20 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

மும்பை, ஜூன்-21,
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சுமார் 20 பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேற்று பிற்பகல் சுமார் 3:30 மணியளவில், Yashwadi கிராமத்தில் உள்ள கோவிலில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கோவிலின் கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபத்தின் (Sabha-mandap) மேல்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், அங்கிருந்த பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்த உள்ளூர் நிர்வாகமும் போலீஸாரும், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



