
கோலாலம்பூர், ஏப்ரல்-5-மது அல்லது போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டுபவர்களைக் கண்டறிய, சாலைத் தடுப்புச் சோதனைகள் மேலும் அதிகரிக்கப்படுகின்றன.
அதிக ஆபத்தான நேரங்களாக கருதப்படும் இரவு நேரங்களிலும் வார இறுதிகளிலும் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என, போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ Muhammed Hasbullah Ali தெரிவித்தார்.
போதை நிலையில் வாகனமோட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
2024-ஆம் ஆண்டில் அத்தகைய 27 சம்பவங்கள் பதிவான நிலையில், கடந்தாண்டு அது 31-ராக உயர்ந்தது.
இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்; காரணம்,சாலைப் பயனர்கள் காயமடைந்த சம்பவங்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்றார் அவர்.
இத்தகைய விபத்துகள் தவிர்க்கக்கூடியவை என்பதால், ஓர் உயிரிழப்பும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் சொன்னார்.
சாலைத் தடுப்பு மற்றும் திடீர் சோதனைகள் குற்றவாளிகளை பிடிக்க மட்டுமல்ல, ஓட்டுநர்களை எச்சரிக்கவும் உதவுகின்றன.
சாலைப் பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு என்பதால், பொது மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு Hasbullah கேட்டுக் கொண்டார்.
மற்றவர்கள் மது அருந்தி அல்லது போதைப்பொருள் உட்கொண்டு வாகனமோட்டியதால், கடந்த ஒரு வாரத்தில் கிள்ளானில் ஒரு மோட்டார் சைக்கிளோட்டியும், ஜோகூர் செகாமாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



