
கோலாலாம்பூர், மே-29-மலேசிய இந்தியச் சமூகத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக, 65.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 6 புதிய அதிரடித் திட்டங்களை மடானி அரசாங்கம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மனிதவள அமைச்சின் கீழ் தற்போது அதிகாரப்பூர்வத் துறையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள ‘மித்ரா’வின் மூலம் இத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படவுள்ளன.
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று அதனை அறிவித்தார்.
Ramanan PC
இதில், B40 பிரிவு குழந்தைகளுக்கான ‘செலிக் மடானி’ பாலர் பள்ளி கல்வி மானியம், SPM மற்றும் STPM மாணவர்களுக்கான ‘கல்வி மடானி’ இலவச தியூஷன் திட்டம், இந்தியச் சிறு தொழில்முனைவோருக்கு ஐம்பதாயிரம் ரிங்கிட் வரை வழங்கப்படும் ‘உயர்வும் மடானி’ தொழில் மான்யம் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.
மேலும், கிராமப்புற இந்தியர்களைச் சென்றடைய 12 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘மடானி மக்கள் கூட்டுத் திட்டம்’, சிறுநீரக நோயாளிகளுக்கு ஆண்டுக்கு 5,000 ரிங்கிட் வழங்கும் ‘ஆரோக்கிய மடானி’ மருத்துவ மானியம் மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கான ‘துணை மடானி’ அவசர நிதியுதவியும் இதில் அடங்கும்.
அடுத்த மாதம் முதல் இதற்கான விண்ணப்பங்கள் கட்டம் கட்டமாகத் திறக்கப்படவுள்ளன.
தகுதியுடைய இந்தியர்கள் தங்களின் விண்ணப்பங்களை மித்ராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழி சமர்ப்பித்து பயன் பெறலாம் என அமைச்சர் சொன்னார்.



