
ஜார்ஜ்டவுன், செப்-15-பினாங்கில் உள்ள ஆரம்பப்பள்ளியொன்றில் மாணவரை உடல்ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர், விசாரணை முடியும் வரை மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவர் தரப்பில் இருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பினாங்கு மாநிலக் கல்வித் துறை (JPNPP) தெரிவித்தது. மாணவரின் நலன் மற்றும் பள்ளிச் சூழலைப் பாதுகாத்து, விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதே அதன் நோக்கம் என அது கூறியது.
தற்போது சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதோடு தேவையான ஆதாரங்களும் ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வேளையில், மாணவருக்கு தேவையான உளவியல்-சமூக ஆதரவு மற்றும் ஆலோசனை வழங்கப்படும் என்றும் JPNPP தெரிவித்தது.
மாணவர்களின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் அச்சுறுத்தலாக அமையும் எந்தவொரு நடத்தையையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த JPNPP, விசாரணை முடிவுகளின் அடிப்படையில் ஆசிரியர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டது.
தேசிய வகைப் பள்ளியொன்றில் ஒன்பது வயது மாணவர் ஒருவர் ஆசிரியரால் தாக்கப்பட்டது குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு பினாங்கு கெராக்கான் பொதுப் புகார் பிரிவு முன்னதாக வலியுறுத்தியிருந்தது. செப்டம்பர் 8ஆம் தேதி பெறப்பட்ட புகாரின்படி, மாணவரின் முதுகின் இடது பக்கத்திலும் இடது கையிலும் காயங்கள் காணப்பட்டதாக அப்பிரிவின் தலைவர் Andrew Ooi கூறியிருந்தார்.



