
கோலாலம்பூர், ஜூன்-22-சிலாங்கூரில் நடத்தப்பட்ட ஒரு மாபெரும் அதிரடி வேட்டையில், தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
Op Cantas Bersepadu என்று பெயரிடப்பட்ட இந்த 4-நாள் அதிரடி நடவடிக்கையை, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (CID), உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடிநுழைவு இலாகாவுடன் இணைந்து நடத்தியது.
இந்த வேட்டையில், போலீஸாரால் நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த 39 முக்கிய குற்றவாளிகள் சிக்கியதாக புக்கிட் அமான் CID இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
இவர்களில் 5 பேர் SOSMA சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டுள்ள வேளை, எஞ்சிய 34 பேர் வன்முறை மற்றும் சொத்து விவகாரங்கள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல் கும்பல்களையும், அவர்களின் வருமான ஆதாரங்களையும் முடக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கையில், 20 முதல் 83 வயதுக்குட்பட்ட மொத்தம் 349 பேர் கைதாகினர்.
மேலும், இந்த சோதனையின் போது சட்டவிரோத பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் ஆவணங்களின்றி வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்திய 13 வணிக வளாகங்களும் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதது குற்றவியல் சட்டம், குடிநுழைவுச் சட்டம் மற்றும் போதைப்பொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



