
மீரி, ஜூலை-20-சரவாக் மீரியில் உள்ள துடான் (Tudan), ஜாலான் பெர்டானா கட்டுமானத் தளத்தில் திடீரெனப் பரவிய இயற்கை மெத்தேன் வாயு கசிவு காரணமாக, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள ஒரு சிலிண்டர் அகழ்வாராய்ச்சித் துளையிலிருந்து வாயு கசிவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Petros நிறுவன அதிகாரிகள் நடத்திய முதற்கட்டப் பரிசோதனையில், கசிவு ஏற்பட்ட இடத்தில் மெத்தேன் வாயுவின் அளவு, அதன் வெடிப்பு அபாயக் கட்டத்தின் (LEL) 100 விழுக்காட்டை எட்டியிருப்பது உறுதிச் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிந்துலு தீயணைப்பு நிலையத்திலிருந்து விரைந்த அபாயகரமானப் பொருட்கள் கையாளும் சிறப்புக் குழுவான Hazmat, தீவிர கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்பப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
வாயு கசிந்த துளையிலிருந்து 3 மீட்டர் சுற்றளவிலும் இந்த வாயுவின் செறிவு பரவியிருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தத் துளையைத் தற்காலிகமாக மூடுமாறு சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்குத் தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது அசம்பாவிதங்களோ ஏற்படவில்லை.
தற்போதைக்கு நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



