
தாப்பா – ஜூன் 12 – இன்று அதிகாலை 1 மணியளவில், தாப்பா, வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் 311.4 கிலோமீட்டரில், பயணிகளை ஏற்றிச் சென்ற இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று, இழுவை லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இவாரத்தில் நடக்கும் மூன்றாவது பேருந்து விபத்தாகும்.
இவ்விபத்தில் 9 பேருந்து பயணிகளுக்கும் லாரி ஓட்டுனருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லையென்றும் மாறாக பேருந்து ஓட்டுனர் இலேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது (Sabarodzi Nor Ahmad) குறிப்பிட்டிருந்தார்.
கடந்த திங்கட்கிழமை, கெரிக்-ஜெலி கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் 15 UPSI மாணவர்கள் பலியான பேருந்து விபத்தை தொடர்ந்து கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையில் UMPSA மாணவர்களை ஏற்றி சென்ற விரைவு பேருந்து, ட்ரைலர் லாரியை மோதி குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இந்த விபத்து மலேசிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பய உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.