
கோத்தா பாரு, ஜூலை 6 – கிளாந்தானில் சில உள்ளூர்வாசிகள், மாதம் 50 முதல் 500 ரிங்கிட் வரை பெற்றுக்கொண்டு தங்களது வாகனங்களை ரொஹிங்கியா இனத்தவருக்கு வாடகைக்கு விடுவது இன்னும் தொடர்வதாக சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ தெரிவித்துள்ளது.
கிளாந்தான் JPJ இயக்குநர் முகமட் மிசுவாரி அப்துல்லா (Mohd Misuari Abdullah) கூறுகையில், சிலர் பண ஆசையால் சட்டவிரோதமான இந்தச் செயலில் ஈடுபடுகின்றனர் என்று குறிப்பிட்டார்.
மேலும், சில ரொஹிங்கியா இனத்தவர்கள், உள்ளூர்வாசிகளின் பெயரில் வாங்கப்பட்ட அல்லது பெயர் மாற்றம் செய்யப்படாத வாகனங்களையும் பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், வெளிநாட்டவர்கள் ஓட்டிய 576 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதில், 457 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 908 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
UNHCR அகதி அட்டை இருந்தாலும், ரொஹிங்கியா இனத்தவருக்கு மலேசியாவில் ஓட்டுநர் உரிமம் பெற முடியாது. எனவே, அவர்களுக்கு வாகனங்களை வாடகைக்கு விடவோ, கடனாக வழங்கவோ கூடாது என்று JPJ எச்சரித்துள்ளது. இதை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.



