
லங்காவி, பிப்ரவரி 26-பொதுவிடத்தில் சிகரெட் துண்டை வீசிய குற்றத்தை ஒப்புக்கொண்ட இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு லங்காவி செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 500 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி பிற்பகல் 2.10 மணியளவில் ஜாலான் பந்தாய் செனாங் (Jalan Pantai Chenang) பகுதியில், சிகரெட் துண்டை குப்பைத்தொட்டியில் போடாமல் கீழே வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட அந்நபரும் நீதிபதியின் முன்னிலையில் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
பொதுச் சுத்தத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 2,000 ரிங்கிட் அபராதமும் சமூகப்பணி உத்தரவும் விதிக்கப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் தண்டனையில் தளர்வு கோரியதால் நீதிமன்றம் அவருக்கு 500 ரிங்கிட் அபராதத்தை விதித்தது.
இந்நிலையில் அவர் அபராதத் தொகையை உடனடியாக செலுத்தி தவறுக்கு மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.



