
கோத்தா கினாபாலு, ஜூன்-6,
சபாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ‘தேசிய ஒற்றுமை வாரக் கொண்டாட்டத்தில் சுமார் 250,000 பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சின் ஏற்பாட்டில், இந்த பிரம்மாண்டக் கொண்டாட்டம் ஜூன் 11 முதல் 14-ஆம் தேதி வரை கோத்தா கினாபாலுவில் உள்ள லிக்காஸ் விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஜூன் 13-ஆம் தேதி சனிக்கிழமையன்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.
”Bersama Membina Negara Bangsa” என்ற கருப்பொருளைக் கொண்டுள்ள இக்கொண்டாட்டம் குறித்துப் பேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங், நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை அடிமட்ட நிலையிலிருந்து வலுப்படுத்துவதற்கு இதுவொரு முக்கிய தளமாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
4 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 50-க்கும் மேற்பட்ட சுவாரசியமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடசான், மூருட், செட்டி, போர்த்துகீசியம் உள்ளிட்ட 15 பழங்குடி மற்றும் இன மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் Rumah KAMI கண்காட்சி, ரஹ்மா மலிவு விற்பனை மற்றும் பாதுகாப்புப் படைகளின் கண்காட்சிகள் இதில் இடம்பெறுகின்றன.
மேலும், இளைஞர்களைக் கவரும் வகையில் e-sports, VR Metaverse மற்றும் டத்தோ Awie, Jaclyn Victor போன்ற முன்னணி உள்நாட்டு கலைஞர்கள் பங்கேற்கும் ‘மாலை ஒற்றுமை கலைநிகழ்ச்சியும்’ நடத்தப்படவுள்ளது.
இந்த விழாவுக்கான நுழைவு முற்றிலும் இலவசமாகும்.



