
சென்னை, மே-11-தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், பதவியேற்பு விழாவில் இசைக்கப்பட்ட கீதங்கள் தற்போது TVK தலைமையிலான ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சியான திமுகவுக்கும் இடையே முதல் அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவின் தொடக்கத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது.
பொதுவாகத் தமிழக அரசு விழாக்களில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடலே முதலில் இசைக்கப்படுவது மரபாகும்.
ஆனால், நேற்று ‘வந்தே மாதரம்’, இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜனகனமன’ ஆகியவைப் பாடப்பட்ட பிறகே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தமிழ்த் தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குப் பின்தள்ளுவதா என சமூக ஊடகங்களில் கண்டனங்கள் குவிந்தன.
இந்நிலையில், நடைமுறை மீறப்பட்டதாகக் கூறி, திமுக உள்ளிட்ட திராவிட இயக்கத்தினர் சமூக வலைத் தளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவுச் செய்து வருகின்றனர்.
திமுக கூட்டணியிலிருந்து TVK-வுக்கு ஆதரவளித்துள்ள விடுதலை சிறுத்தைக் கட்சி, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவையும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்தச் சர்ச்சை குறித்துப் பேசியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநிலத் துணைச் செயலாளரும் புதிய அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, இது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல என விளக்கமளித்துள்ளார்.
பதவியேற்பு விழாவை ஆளுநர் மாளிகை ஒருங்கிணைத்ததால் இந்தத் தவறு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் இத்தகைய குழப்பங்களைத் தவிர்க்க, அரசு விழாக்களில் இனி ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடலே முதலில் இசைக்கப்படும் என அவர் சொன்னார்.
மாநில உரிமைகளுக்கும், தமிழ் உணர்வுக்கும் முக்கியத்துவம் அளிப்பதில் TVK உறுதியாக இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
பதவியேற்ற முதல் நாளே தமிழ் உணர்வு மற்றும் தேசியக் கீதங்களுக்கு இடையிலான இந்த விவாதம், வரவிருக்கும் நாட்களில் தமிழக அரசியலில் TVK-வின் நிலைப்பாட்டை உற்றுநோக்க வைத்துள்ளது.



