
நெகிரி செம்பிலான், செப்டம்பர் 2 – நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ வி.எஸ். மோகன், மாநில மந்திரி பெசார் டத்தோ ஹாஜி இஸ்மாயில் பின் லாசிமின் (YAB Dato’ Haji Ismail bin Lasim) இந்திய சமூக விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்தப் பதவி ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO) அந்தஸ்துக்கு இணையானதாகும்.
2008 முதல் 2013ஆம் ஆண்டு வரை ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய டத்தோ வி.எஸ். மோகன், தற்போது சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
தம்மை இந்தப் பதவிக்கு நியமித்த மாநில மந்திரி பெசாருக்கும், தமது பெயரைப் பரிந்துரைத்த மஇகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்திய சமூகத்தின் நலனுக்காகவும், மாநில மக்களின் நலனுக்காகவும் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.



