
கோலாலம்பூர், ஜூன்-2-சீன மற்றும் இந்தியச் சமூகங்களைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு கடன் நிதியை, BSN வங்கியின் கீழ் மாற்ற வேண்டும் என, பினாங்கு பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, சீன வணிகர்களுக்கான RM100 மில்லியன் கடன் நிதி, SME Bank மற்றும் Bank Rakyat மூலமும், இந்திய வணிகர்களுக்கான RM50 மில்லியன் SPUMI நிதி, தெக்குன் நேஷனல் (TEKUN) மூலமும் வழங்கப்படுகின்றன.
ஆனால், இந்த வங்கிகளில் கடன் பெற ‘ஷாரியா’ நெறிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
இதனால், உணவகம், பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த முஸ்லீம் அல்லாத வணிகர்கள் இந்த கடன்களைப் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
நாடு முழுவதும் 387 கிளைகளைக் கொண்டுள்ள BSN வங்கியில் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை என்பதால், இந்த நிதியை அங்கு மாற்றுவதே சரியான தீர்வு என, முன்னாள் நிதியமைச்சருமான லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.



