
வாஷிங்டன், மே-13-1MDB நிதி மோசடி விவகாரத்தில் தேடப்பட்டு வரும் முக்கிய நபரான கோடீஸ்வரர் ஜோ லோ, தமக்கு மன்னிப்பு வழங்குமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் Wall Street Journal இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஜோ லோ தரப்பு இதற்காகப் பல மில்லியன் டாலர்களைச் செலவிட்டு, ட்ரம்ப் நிர்வாகத்தில் செல்வாக்கு மிக்க நபர்கள் மூலம் இந்த மன்னிப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் தமக்கு எதிராக நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளிலிருந்து தப்பிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை மீட்கவும் அவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், இது குறித்து வெள்ளை மாளிகையோ அல்லது அமெரிக்க நீதித்துறையோ அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
மலேசியாவால் தேடப்பட்டு வரும் ஜோ லோவின் இந்த அதிரடி முயற்சி, 1MDB வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வுகளில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



