
மும்பை, மே-30 – ஒரு பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் நபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இங்கிருந்த போது அந்தக் கும்பலுக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் நவின் சிச்கர் (Navin Chichkar), இப்போது மும்பையில் உள்ள NCB எனப்படும் இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் காவலில் இருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பை நீதிமன்றம் அவரை NCB காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
அனைத்துலக போலீஸான Interpol, இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மலேசிய அமுலாக்க அதிகாரிகள் இணைந்து நடத்திய நடவடிக்கையைத் தொடர்ந்து நவின் கைதானார்.
NCB பல ஆண்டுகளாகவே சந்தேக நபரைக் கண்காணித்து வந்த வேளை, Interpol அண்மையில் NCB-யின் வேண்டுகோளைத் தொடர்ந்து ஒரு சிவப்பு அறிவிப்பை வெளியிட்டது.
நவின் முதன் முதலில் 2021-ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புப்படுத்தப்பட்டார்.
ஆனால் உடனடியாக அவர் தலைமறைவானார்.
பின்னர் தாய்லாந்தில் காணப்பட்டவர் கடைசியாக மலேசியாவுக்கு வந்தார்.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கோகோயின் மற்றும் கஞ்சாவை அனுப்பும் கும்பலை மலேசியாவிலிருந்து நவீன் வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் அவர் இங்கு கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.
இந்திய அதிகாரிகள் நடத்தும் விசாரணையில், அனைத்துலக போதைப்பொருள் கட்டமைப்பு குறித்து நவினிடமிருந்து பல உண்மைகள் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.