
கோலாலம்பூர், ஜூன்-2-கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் கடந்த மாதம் ஓரினச்சேர்க்கையாளர்கள் கலந்துகொண்ட போதைப்பொருள் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட சீன நபர், அந்த நிகழ்வின் அமைப்பாளராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 51 நபர்களில் அந்த நபரும் ஒருவர் என்று போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் (Hussein Omar Khan ) தெரிவித்தார்.
தனித் தனித் சோதனைகளில் மேற்கொள்ளப்பட்ட நான்கு நடவடிக்கைகளின்போது 21 முதல் 52 வயதுக்குட்பட்ட உள்நாட்டைச் சேர்ந்த 23 பேருடன் 28 வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டனர்.
ஒரு தனிப்பட்ட கணக்கைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் தளம் வழியாக இந்த நிகழ்வு விளம்பரப்படுத்தப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது 103,070 ரிங்கிட் மதிப்புடைய பல்வேறு போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த போதைப்பொருட்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கானவை என்பதோடு , விருந்தில் கலந்துகொண்டவர்களால் பயன்படுத்தப்பட்டவை என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக உசேய்ன் கூறினார்.
இதுவரை போதைப் பொருள் விநியோகிப்பு கும்பல்களைச் சேர்ந்த எவரும் அடையாளம் காணப்படவில்லை.
கைது செய்யப்பட்ட அனைத்து 51 நபர்கள் மீது போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அதேவேளையிவ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய சீன நபர் மீது, 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 12(2) மற்றும் பிரிவு 15(1)(a) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.



