
பாசிர் கூடாங், மே 9- பாசிர் கூடாங் மாசாய் தாமான் ஸ்ரீ பிளேங்தோங்கில் (Taman Sri Plentong), ஆடவர் ஒருவர் ஆற்றில் குப்பைகளை கொட்டும் காணொளி வாகமோட்டி ஒருவரின் டேஷ்காமில் பதிவாகி, வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக ஜோகூர் மாநில அரசு தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கின்றது.
அக்காணொளியில், ஆடவர் ஒருவர் லாரியிலிருந்த ஒட்டு மொத்த குப்பைகளையும் ஆற்றில் கொட்ட முற்படுபவதை கண்டிக்கும் காட்சிகளைக் காண முடிகின்றது. அதே நேரத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்ய போவதாகவும் எச்சரித்துள்ளார்.
இந்த காணொளியைக் கண்ட பொதுமக்கள் பெரும் எதிர்ப்பைக் காட்டி வரும் நிலையில் ஜோகூர் மாநில சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் லிங் தியான் சூன்னும் ( Ling Tian Soon) கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குப்பை கொட்டப்படுவதை தடுக்க தைரியமாக பேசிய நபரின் துணிவைப் பாராட்டிய அவர், குற்றவாளியை அடையாளம் கண்டு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று பாசிர் கூடாங் நகர சபை அமலாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு நதி நீர் மாசுபாட்டின் விளைவுகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.