
இஸ்லாமாபாத், மே-9 – இந்தியா நடத்தியத் தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அனைத்துலக பங்காளிகளிடம் பாகிஸ்தான் கூடுதல் கடன்களைக் கேட்டுள்ளது.
“எதிரிகளால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது; மோசமாகி வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், எங்களின் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேம்” என பாகிஸ்தான் அரசாங்கத்தின் பொருளாதார விவகாரங்களுக்கானப் பிரிவின் X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மண்ணியிடுவதாகக் கூறி இப்பதிவு வைரலாகி வரும் நிலையில், அச்செய்தியை இஸ்லாமாபாத் மறுத்துள்ளது.
பொருளாதார அமைச்சின் X தளம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக அது கூறிக் கொண்டது.
மற்றொரு நிலவரத்தில், பாகிஸ்தான் தனது சொந்த மண்ணிலும், இந்தியாவின் எல்லையிலும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கான மறுக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாக, பிரிட்டனுக்கான இந்திய உயர் ஆணையர் விக்ரம் துரைசாமி கூறியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், Sky News-சிடம் துரைசாமி பேசினார்.
அமெரிக்காவால் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாதியும், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரருமான ஹபீஸ் அப்துர் ரவூஃப் உடன் பாகிஸ்தானின் உயர் இராணுவ அதிகாரிகள், ‘ஆபரேஷன் சிந்தூரின்’ கீழ் இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதைக் காட்டும் ஒரு போஸ்டர் அளவிலான படத்தை விக்ரம் ஆதாரமாக வழங்கினார்.
அப்படத்தில் ரவூப்பின் பின்னால் சீருடை அணிந்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் இருக்கின்றனர்; பயங்கரவாதிகளின் சவப்பெட்டிகளில் பாகிஸ்தான் கொடிகள் போர்த்தப்பட்டிருந்தன.
எனவே, பயங்கரவாதிகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் பேசுவது வெறும் கட்டுக் கதையென்றார் அவர்.
26 பேர் பலியான ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால், இந்தியா ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவதாக பாகிஸ்தன கூறி வருகிறது.