
ஜகார்த்தா, ஆகஸ்ட்-26-இந்தோனேசியாவின் பல பகுதிகளில் காடுகளிலும் நிலப்பரப்புகளிலும் பரவியுள்ள தீ தணிந்து சீரடையத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கூறியிருக்கிறார். எனவே அடுத்த ஒன்று அல்லது இரு வாரங்களுக்குள் நிலைமை முழுமையாகச் சீரடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஹெலிகாப்டர்கள், 12க்கும் மேற்பட்ட விமானங்கள், நூற்றுக்கணக்கான நீர்க் கிணறுகள் மற்றும் நீர் பம்ப்புகள், ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எனத் தீயை அணைக்க பேரளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல இடங்களில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்து சீரடைய ஆரம்பித்துள்ளது. இன்னும் இரு வாரங்களில் முன்னேற்றத்தைப் பார்க்கலாம் என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ‘எல் நினோ’ (El Nino) பருவநிலை தீவிரமாக இருக்கிறது. எனவே, இந்த வானிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து விழிப்புடனும் கவனமாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. நிலைமையை ஆய்வு செய்ய தாம் தனிப்பட்ட முறையில் பல பகுதிகளுக்குச் சென்றதாகவும், மாவட்ட அரசாங்கங்கள், அமைச்சுகள், நிறுவனங்கள், இராணுவம், காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் திறம்படச் செயல்பட்டு வருவதைக் கண்டறிந்ததாகவும் பிரபோவோ கூறினார்.
இவ்வேளையில் இம்மாதத் தொடக்கத்தில் கிழக்கு நுசா தெங்காராவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் உட்பட அண்மைய பிற பேரிடர்களுக்கு அரசாங்கம் உரிய வகையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிழக்கு நுசா தெங்காராவின் புளோரஸ் பகுதியை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர். 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.



