
உத்தரப் பிரதேசம், ஜூலை 12 – இந்தியா, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் மூடிய பாட்டிலில் இருப்பது தண்ணீர் என தவறாக நினைத்து அமிலத்தை அருந்தியதால் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
வெள்ளிக்கிழமை மாலை அப்பெண் நகைக்கடைக்குச் சென்றிருந்தார்.
அப்போது தாகமாக இருந்ததால் குடிநீர் கேட்டுள்ளார். அருகிலிருந்த ஒரு கடையிலிருந்து கொண்டு வரப்பட்ட பாட்டிலில் தண்ணீருக்குப் பதிலாக அமிலம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மூடியிருந்த பாட்டிலில் இருப்பது தண்ணீர் என நினைத்து அதை அருந்திய உடனேயே அவரது தொண்டையில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமிலம் எவ்வாறு அந்தப் பாட்டிலில் வைக்கப்பட்டது, அலட்சியம் ஏற்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



