சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் 4-நாள் பயணமாக இன்று மலேசியா வருகை

கோலாலாம்பூர், ஜூலை-12 – சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், இன்று முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை மலேசியாவுக்கான தனது முதலாவது அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறார்.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோலாலாம்பூர் வந்ததடைந்ததும், இஸ்தானா நெகாராவில் அதிபர் தர்மனுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து, அவர் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துதல், வியூக உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் இருநாட்டு மக்களிடையேயான கலாச்சார உறவுகளை ஆழப்படுத்துவது ஆகியவை இச்சந்திப்பின் முக்கிய நோக்கங்களாகும்.
வட்டார நிலைத்தன்மை மற்றும் கூட்டு வளர்ச்சியை நோக்கி இரு நாடுகளும் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த அரசு முறைப் பயணம் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



