
ஷா ஆலம், ஜூலை-12 – ஷா ஆலாம் அருகே, கெசாஸ் நெடுஞ்சாலையில் நேற்றிரவு இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; மேலும் இருவர் கடுமையான காயங்களுக்குள்ளாகினர்.
இரவு 11.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த Sedan காரால் மோதப்பட்டதில், MPV வாகனத்தில் பயணித்த 20 வயதிலான அந்தப் பெண், கடுமையான காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், வாகன இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவரின் உடலை மீட்க சில நிமிடங்கள் போராட வேண்டியிருந்தது.
காயமடைந்த மற்ற இரு பயணிகளான அப்பெண்ணின் அண்ணி மற்றும் அவரது 9 வயது மகன் தலையிலும் முகத்திலும் காயமடைந்து அவசரச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக கெசாஸ் நெடுஞ்சாலையில் காரொன்று குப்புறக் கவிழ்ந்துக் கிடந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
மோதியக் கார், மதுபோதையில் இருந்த ஆடவரால் ஓட்டப்பட்டதாகவும் தகவல் பரவியது.
இந்நிலையில், விசாரணைக்கு உதவும் வகையில் 50 வயதிலான உள்ளூர் ஆடவரைப் போலீஸ் தீவிரமாகத் தேடுகிறது.



