உரிய நேரத்தில் ஈரான் தெஹ்ரானுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வேன்: பிரதமர் அன்வார் உறுதி

புத்ராஜெயா, மே-27,
ஈரானிய அதிபர் Masoud Pezeshkian தொலைபேசி வாயிலாக உரையாடியதைத் தொடர்ந்து, தகுந்த நேரத்தில் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய அந்த உரையாடலில், Hormuz நீரிணையில் சிக்கியிருந்த மேலும் ஒரு மலேசியக் கப்பலை விடுவிக்க உதவியதற்காக ஈரானுக்கு அன்வார் நன்றித் தெரிவித்தார்.
அதோடு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களையும், இராணுவ நடவடிக்கைகளையும் மலேசியா தொடர்ந்து கண்டிப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மலேசியாவின் அமைதி மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளுக்கு நன்றி தெரிவித்த ஈரான் அதிபர், இருதரப்பு மற்றும் வியூக உறவுகளை வலுப்படுத்த பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பிறகு Hormuz நீரிணை மூடப்பட்டதால் 7 மலேசியக் கப்பல்கள் அங்கு சிக்கிக்கொண்டன.
ஈரானிய அதிகாரிகளுடன் பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இதுவரை 4 மலேசியக் கப்பல்கள் அங்கிருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



