
கோலாலம்பூர், பிப்ரவரி-26-அடுத்தப் பொதுத் தேர்தலுக்கான ஒற்றுமை அரசாங்கத்தின் வியூகம் குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்த வேண்டும் என, DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வலியுறுத்தியுள்ளார்.
மடானி கூட்டணியின் கீழ் அனைத்து கட்சிகளும் ஒன்றாக தேர்தலில் போட்டியிடுமா, அல்லது எதிரெதிர் முனையில் நின்று தேர்தலைச் சந்திக்குமா என்பது கூடிய விரைவிலேயே தெளிவாக வேண்டும்.
ஒரே நேரத்தில் மத்திய அரசாங்கத்தில் கூட்டாக ஆட்சி செய்துகொண்டு, மாநிலங்களில் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடுவது அரசியல் ரீதியாக பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டார்.
தெளிவான முடிவு இல்லையெனில் கூட்டணி ஒத்துழைப்பில் குழப்பம் ஏற்படும் அபாயம் உள்ளது; எனவே தேர்தல் வரை காத்திராமல் முன்கூட்டியே இது குறித்து பிரதமர் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டுமென அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.
_“கூட்டணியாக போட்டியிட முடிவெடுத்தால் அதற்கேற்ப ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து தேர்தல் பணியை ஆற்ற வேண்டும்; அதுவே எதிர்த்து போட்டியிட முடிவெடுத்தால் நேருக்கு நேர் களத்தில் தைரியமாக சந்திப்போம்”_ என்றார் அவர்.
மலாக்கா சட்டமன்றம் வரும் டிசம்பரில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சரவாக் சட்டமன்றத்தின் ஐந்தாண்டு தவணைக் காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 14-ஆம் தேதியோடு முடிவடைகிறது.
நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதே சிறந்தது என்றும் அந்தோணி லோக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.



