
புத்ராஜெயா, மே-6-மலேசிய இந்தியர்களின் கல்வி உரிமைகளை மேம்படுத்தக் கோரி, கல்வி அமைச்சரிடம் ம.இ.கா 7 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
ம.இ.கா உதவித் தலைவரும் கல்விக் குழுத் தலைவருமான டத்தோ Dr நெல்சன் ரெங்கநாதன் தலைமையிலான குழுவினர், புத்ராஜெயாவில் ஃபாட்லீனா சிடேக்கைச் சந்தித்து இந்த மனுவை அளித்தனர்.
ம.இ.கா முன்னாள் உதவித் தலைவரும் பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சருமான டத்தோ ஸ்ரீ S.K. தேவமணி, கல்வித் துறை முன்னாள் துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், ம.இ.கா தொடர்புப் பிரிவுத் தலைவர் L. சிவசுப்ரமணியம் உள்ளிட்டோரும் அச்சந்திப்பில் பங்கேற்றனர்.
மெட்ரிகுலேஷன் கல்வியில் இந்திய மாணவர்களுக்கான 2,000 இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தவும், B40 மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கவும் இதில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், பள்ளிகளில் POL எனப்படும் தாய்மொழி வகுப்புகளை பாடவேளையில் நேரத்திலேயே சேர்த்து நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், தமிழ்ப் பள்ளிகளில் முழுமையான பாலர் பள்ளி வசதிகளை உறுதிச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்தியச் சமூகத்தின் கல்வித் தரத்தை உயர்த்த இந்த கோரிக்கைகள் மிக அவசியம் என டத்தோ நெல்சன் தெரிவித்தார்.
இந்நிலையில், கோரிக்கைகளை நன்கு பரிசீலிப்பதாகவும், ம.இ.கா கல்விக் குழுவோடு இணைந்து தமிழ்ப் பள்ளிகளையும், தமிழ்ப் பள்ளி மாணவர்களையும் தரமுயர்த்த அமைச்சு கடப்பாடு கொண்டிருப்பதாக, ஃபாட்லீன உறுதியளித்ததாக L.சிவசுப்ரமணியம் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
இவ்வேளையில், மாணவர்கள் பாதியிலேயே கல்வியைக் கைவிடுவதைத் தவிர்க்க, இலவச TVET மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான பரிந்துரைகளையும் ம.இ.கா வழங்கியுள்ளது.
மிகவும் சுமூகமாக நடைபெற்ற அச்சந்திப்பில் கல்வி இயக்குநரும் பங்கேற்றார்.



