
ஈப்போ, ஆகஸ்ட்-16-தமிழ் இலக்கியத்திலும் திரையிசையிலும் தனக்கென அழியாத தடம் பதித்த கவியரசு கண்ணதாசன் உண்மையாகவே காலத்தை வென்றவர் என, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு நினைவை முன்னிட்டு, கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் “காலத்தை வென்றவர் கவியரசு கண்ணதாசன்” சிறப்பு விழா ஈப்போ Dewan YRSK மண்டபத்தில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்வுக்குத் தலைமைத் தாங்கி உரையாற்றிய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன், கடினமான தத்துவங்களையும் எளிய தமிழில் மக்களுக்குக் கொண்டு சேர்த்த பெருமை கண்ணதாசனையே சாரும் என்றார்.
மேலும், இன்றைய இளம் தலைமுறையினர் அவரது படைப்புகளை வாசித்து, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் அனுபவத்தைப் பெற வேண்டும் என்றும் சரவணன் வலியுறுத்தினார்.
மாநில ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ வி.இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த இலக்கியப் பேருரையில், தமிழகப் பேச்சாளர்களான த. இராமலிங்கம், மரபின் மைந்தன் முத்தையா மற்றும் தாமல் கோ. சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பேராக்கைச் சேர்ந்த ஐவருக்கு, கண்ணதாசன் அறவாரியத்தின் சார்பில் விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் திரளான தமிழ் ஆர்வலர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



