
கோலாலம்பூர், ஜூன் 12 – தெலுக் இந்தான் Jalan Chikus – Sungai Lampam மில் கடந்த மாதம் கலகத் தடுப்பு போலீஸ்காரர்களில் 9 பேர் உயிரிழந்ததற்கான விபத்திற்கு காரணமாக இருந்த லோரியில் 70 விழுக்காட்டிற்கும் கூடுதலான எடை ஏற்றியிருந்ததே காரணம் என தெரியவந்துள்ளது. அந்த லோரி கலகத் தடுப்பு போலீஸ்காரர்களை ஏற்றிச் சென்ற டிரக்குடன் ஏற்பட்ட விபத்திற்கு பாதுகாப்பு பலவினம் மற்றும் சம்பந்தப்பட்ட லோரியின் நடவடிக்கை நடைமுறையும் மற்றொரு காரணம் என சிறப்பு விசாரணைக் குழுவின் தொடக்கக் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 13ஆம் தேதி நிகழ்ந்த அந்த சம்பவத்தின்போது அந்த சரக்கு லோரி 40,960 கிலோ சிறுகற்களை ஏற்றிச் சென்றது, அனுமதிக்கப்பட்ட 24,000 கிலோ எடையைவிட 70.67 விழுக்காடு கூடுதலான எடை அதுவாகும்.
மேலும் ஜே,பி.ஜே எனப்படும் சாலை போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு பரிசோதனையிலும் அந்த லோரி தவறியுள்ளதோடு அந்த வாகனம் 15 விழுக்காடு தேர்ச்சி புள்ளிகளை மட்டுமே அது பெற்றிருந்ததோடு பாதுகாப்பு அம்சங்களுக்கு தேவையான அனைத்து 7 தகுதிகளையும் நிறைவு செய்யவில்லை. அதே வேளையில் FRU டிரக்கின் பாதுகாப்பிலும் சில பிரச்சனைகள் இருப்பதை விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டியது. முன் இருக்கைகளிலும் பின் இருக்கைகளிலும் பாதுகாப்பு பெல்ட் இல்லை. மேலும் பின்னால் பயணிகள் அமர்ந்திருந்த இடத்தில் அவர்களது தலைப்பகுதி இடத்திலும் பாதுகாப்பு வசதிகள் இல்லை. இத்தகைய பாதுகாப்பு பலவீனங்கள் அதில் இருந்தவர்கள் உயிரிழப்புக்கும் காயம் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்த அபாயத்தையும் விசாரணை குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.