
கோலாலம்பூர், மே-10- கோலாலம்பூர் பழைய கிள்ளான் சாலையில் ஓர் உணவகத்தின் அருகே தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவின் சடலம் கிள்ளான் ஆற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று பிற்பகலில் அந்த உணவகத்தில் இருந்த ஒருவர், ஆற்றில் சடலம் போன்றதொரு பொருள் கல்லில் மாட்டிக் கொண்டிருப்பதை கண்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
சம்பவம் இடம் விரைந்த செப்பூத்தே தீயணைப்பு-மீட்புத் துறை, தொப்புள் கொடி அறுக்கப்படாத ஆண் சிசுவின் சடலத்தை மேலே கொண்டு வந்தது.
இன்று பிற்பகலில் சவப்பரிசோதனை நடைபெறுவதாக கோலாலம்பூர் போலீஸ் கூறியது.
சந்தேக நபர் எவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. குழந்தைப் பிறப்பை மறைக்க அதனை வீசியதன் பேரில் விசாரிக்கப்படுகிறது.