
குவாந்தானில் ஆடவரால் சொந்த குடும்பமே படுகொலை; பணப்பிரச்சனையே காரணம் – சந்தேகம்
குவாந்தான், பிப்ரவரி-18,
குவாந்தான், தாமான் செராத்திங் டாமாயில் சொந்தத் தாய், 2 பிள்ளைகள் மற்றும் மனைவியை ஆடவர் கொலைச் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுமிகள், அவர்களின் 28 வயது தாய் மற்றும் 55 வயது பாட்டி ஆவர்.
கொலையாளியான 32 வயது நபரும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
போலீஸ் விசாரணையில், கொலையாளி கூர்மையான ஆயுதத்தால் அந்நால்வரையும் தாக்கிக் கொன்று பின்னர் தன்னைத் தானே தாக்கிக் கொண்டது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு மோசமான பணப் பிரச்னையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுவதாகக் கூறிய பஹாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹ்யா ஒத்மான், கொலையாளி மனநலம் பாதிக்கப்பட்டதற்கான பதிவுகள் எதுவும் இல்லையென்றார்.
கொலையுண்ட குடும்பம் மிகவும் நட்பாக இருந்ததாகவும், கொலையாளி கூட சிரித்த முகத்தோடு அளவளாவுபவர் என்றும் கூறிய அண்டை வீட்டார், இத்துயரச் சம்பவம் நம்ப முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.
உடல்கள் சவப்பரிசோதனைக்காக தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.



