
குவா மூசாங், ஜூலை-15-கிளந்தான், குவா மூசாங்கில் தேசியப் பள்ளியொன்றின் அருகே காட்டு யானையொன்று சுற்றித் திரிந்தது ஆசிரியர்களையும் மாணவர்களையும் கதி கலங்கச் செய்தது.
நேற்று காலை 8.30 மணியளவில் பாட போதனையின் போது நிகழ்ந்த அச்சம்பவத்தை, அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் காணொளியாகப் பதிவு செய்துள்ளார்.
யானை பள்ளிக்கு வெளியே வேலி அருகேதான் இருந்தது. இருப்பினும் அதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பீதியடைந்தனர். அக்காட்டு யானை சுமார் ஒரு மணி நேரம் அங்கு உணவு தேடிக் கொண்டிருப்பது போல் காணப்பட்டது.
இறுதியில் அந்தக் காட்டு யானையை பூர்வக்குடி கிராமவாசிகள் மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்ததாக Tengku Mohamad Farid Tengku Mohamad Nordin எனும் அந்த ஆசிரியர் சொன்னார்.
காட்டு யானைகள் பூர்வக்குடிகளின் கிராமங்களுக்குள் நுழைவது அசாதாரணது அல்ல. மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை அத்தகையச் சம்பவங்கள் நிகழும். அச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சொன்னார்.
சில சமயங்களில் பள்ளி வளாகத்திற்குள் இரவில் யானையின் கால் தடங்கள் காணப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. பள்ளி நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து, வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்ததாகவும் Tengku Mohamad Farid விளக்கினார்.



