
பாலிங், ஜூன்-2-கெடா, பாலிங்கில் உள்ள குவாலா கெட்டில் பகுதியில் வீடுபுகுந்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டதுடன், அரிவாளால் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க வாலிபரைப் படுகாயப்படுத்திவிட்டு தப்பியோடிய இரு கொள்ளையர்களைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நேற்று காலை 8.10 மணியளவில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், கையில் கூர்மையான அரிவாளுடன் வீட்டின் உரிமையாளரான அந்த வாலிபரைத் தாக்கியுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட நபருக்குத் தலை, தோள்பட்டை மற்றும் முழங்கைப் பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவர் நிலைகுலைந்ததைத் தொடர்ந்து, அவரிடமிருந்த ரொக்கப் பணம் மற்றும் தனிப்பட்ட உடமைகளைச் சுருட்டிக்கொண்டு அந்த இரு கொள்ளையர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர்.
காயமடைந்த வாலிபர் தற்போது சுங்கை பட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய பாலிங் மாவட்ட போலீஸ், குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து, தப்பியோடிய இரு கொள்ளையர்களைப் பிடிக்கத் தீவிரமாக முயன்று வருகிறது.



