பத்து பஹாட், மே-29, TNB பணியாளர் எனக் கூறிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்த நபரின் மோசடியில் சிக்கி, 1 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் பணத்தைப் பறிகொடுத்துள்ளார் ஜொகூர் பத்து பஹாட்டைச் சேர்ந்த 61 வயது முதியவர்.
பஹாங், குவாந்தானில் உள்ள TNB பணியாளர் எனக் கூறிக் கொண்ட மர்ம நபர், அம்முதியவர் மின்சார திருட்டில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறார்.
தனது வீடு ஜொகூரில் இருக்க, குவாந்தானில் எப்படி மின்சார திருட்டில் ஈடுபட முடியும் என முதியவர் கேள்வி எழுப்பிய நிலையில், தொலைப்பேசி அழைப்பு உடனடியாக பஹாங் காவல் துறை தலைமையகத்தைச் சேர்ந்தவர் என ஆள் மாறாட்டம் செய்த நபரிடம் மாற்றப்பட்டது.
போலீஸ் எனக் கூறிக் கொண்ட அந்நபரோ, அம்முதியவர் கருப்புப் பண விஷயத்திலும் சம்பந்தப்பட்டிருப்பதாக் கூறி அவரை மேலும் அதிர்ச்சியடைய வைத்தார்.
விசாரணைக்காக வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைத் தருமாறும் கேட்க, பயத்தில் இவரும் கொடுத்து விட்டார்.
எனினும், கடந்த மே 26-ஆம் தேதி வங்கியைத் தொடர்புக் கொண்ட போது தான், தனது கணக்கில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் பணம், 3 வெவ்வேறுக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பதை அவர் உணர்ந்தார்.
இதையடுத்தே அவர் பத்து பஹாட் போலீஸில் புகார் செய்தார்.
தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை நம்பி மோசம் போகாதீர்கள் என போலீஸ் மீண்டும் பொது மக்களை நினைவுறுத்தியுள்ளது.