
கோத்தா கெமுனிங், ஜூன்-6 – சிலாங்கூர், கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் 2025 SPM தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற 152 மாணவர்களுக்கு, மொத்தம் 36,550 ரிங்கிட் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
Dewan MBSA Aster மண்டபத்தில் நடைபெற்ற Majlis Generasi Cemerlang பாராட்டு விழாவில், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் இந்த ஊக்கத்தொகைகளை எடுத்து வழங்கினார்.
மாணவர்களின் சாதனைக்கு ஏற்ப இந்த நிதியுதவி பிரித்து வழங்கப்பட்டது.
அதன்படி, 8A பெற்ற 60 மாணவர்களுக்கு தலா 200 ரிங்கிட்டும், 9A பெற்ற 65 மாணவர்களுக்கு தலா 250 ரிங்கிட்டும் வழங்கப்பட்டது.
மேலும், 10A பெற்ற 23 மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட்டும், 11A பெற்று சாதனை படைத்த 4 மாணவர்களுக்கு தலா 350 ரிங்கிட்டும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரகாஸ், வெறும் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை விட, கல்வி மற்றும் மனித மூலதனத்தில் முதலீடு செய்வதற்கே தங்களின் தொகுதி எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்றார்.
நல்லத் தேர்ச்சிப் பெற்று மேற்கல்வி வாய்ப்புக் கிடைத்த மாணவர்களுக்குப் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொண்ட பிரகாஸ், அவர்கள் அவ்வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்தி தங்களை உயர்த்திக் கொள்வர் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
கோத்தா கெமுனிங் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த பாராட்டு விழா நடத்தப்படுவதோடு, SPM கருத்தரங்குகள் மற்றும் ‘S.M.K Kota Kemuning 2’ போன்ற உள்ளூர் பள்ளிகளுக்கான மேம்பாட்டு நிதியுதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



