
கோலாலாம்பூர், மே-26-சிலாங்கூரில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து, அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் என மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமா வலியுறுத்தியுள்ளது.
கோவில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் சின்னங்கள் என்று மஹிமா தலைவர் டத்தோ என். சிவக்குமார் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து மற்றும் நகரமைப்பு திட்டமிடல் குறித்தே இந்த வழிகாட்டிகள் வரையப்பட்டுள்ளதாக மாநில அரசு விளக்கம் அளித்திருந்தாலும், பொது மக்களின் கவலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவர் கூறினார்.
எனவே, இறுதி முடிவை எடுப்பதற்கு முன் கோவில் நிர்வாகங்கள், ஆன்மீக அமைப்புகள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய வட்டமேசை பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், பல தசாப்தங்களாக இருக்கும் வழிபாட்டுத் தலங்கள் மீதான அமுலாக்கங்களை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்றும் சிவகுமார் வலியுறுத்தினார்.



