
கோலாலம்பூர்,ஏப் 29 – ஏப்ரல் 20 முதல் 24 வரை ஜோகூரில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது, அம்மாநில போலீசார் நான்கு மாவட்டங்களில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவன் உட்பட ஐவரை கைது செய்து 9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கிட்டத்தட்ட 70 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மொத்தம் ஐந்து போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டதோடு போதைப்பொருட்களை வைக்கும் கிடங்காக மூன்று வாகனங்களும் இரண்டு அடுக்குமாடி வீடுகளும் பயன்படுத்தப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.
ஏப்ரல் 20 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் ஜாலான் அப்துல்லா தாஹிர் வழியாக நடத்தப்பட்ட முதல் நடவடிக்கையில் 22 வயது உள்ளூர் ஆடவன் கைது செய்யப்பட்டதோடு அவனிடம் இருந்து 9.35 கிலோ போதை மாத்திரைகள் மற்றும் 62 கிராம் Ketamine போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மதிப்பு 1.57 மில்லியன் ரிங்கிட்டாகும். மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து சந்தேக நபர் வாடகைக்கு எடுத்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது பொருட்கள்கண்டுபிடிக்கப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் குமார் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த சோதனை நடவடிக்கைகளிலும் சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பெரிய அளவில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகப் பேர்வழிகளும் தற்போது விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குமார் தெரிவித்தார்