
கோலாலம்பூர், மே 7 -ஜோகூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படும் என வெளியான வதந்திகளை அம்மாநில மந்திரிபெசார் ஓன் ஹபிஸ் காஸி ( Onn Hafiz Ghazi) மறுத்தார்.
பல அரசியல்வாதிகள் மாநிலத் தேர்தல் குறித்து பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதாலும், மற்றவர்கள் தங்களுக்கு இடங்கள் வேண்டும் எனக் கோரியதாலும், ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவது குறித்த ஆருடங்கள் அண்மையில் தீவிரமடைந்தன.
மாநிலத் தேர்தல் தொடர்பான விவகாரங்கள் இப்போதைக்கு ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதோடு , ஜோகூர் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யுமாறு மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர் வலியுறுத்தினார்.
சட்டமன்ற விவாத அமர்வின் போது சில வேறுபாடுகளை தாம் கவனித்ததாகவும் , ஒருவேளை அரசியல் பதற்றம் அதிகரித்து வருவதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஜோகூர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின்போது Onn Hafiz Ghazi சுட்டிக்காட்டினார்.
மாநிலத் தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி மாநில சட்டமன்றக் கூட்டத்தொடராக இது இருக்கலாம் என்று சிலர் கூறியபோதிலும் , ஜோகூர் மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படாது என்பதால் அனைவரும் நிம்மதியாக இருக்கலாம் என அவர் அறிவித்தார்.
இன்னும் செயல்படுத்தப்பட வேண்டிய பல திட்டங்களும் நடவடிக்கைகளும் இருப்பதால், தேர்தல் விவகாரத்தை ஒதுக்கிவைத்து மக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துவீர் என 56 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் அவர் கேட்டுக் கொண்டார்.



