
ஷா ஆலம், மே-11 – தாயைப் போல் குடும்பத்தை வழி நடத்த யாரும் இல்லை உலகினிலே என, சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் ச.பிரகாஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஷா ஆலாம், அலாம் மேகா ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைப்பெற்ற அன்னையர் தின விழாவில் சிறப்பு பிரமுகராக கலந்துக்கொண்ட போது அவர் அவ்வாறு கூறினார்.
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை என்று முன்னோர்கள் சொல்வார்கள், அதுப் போலத்தான் இங்கு கூடியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அன்னையரை தெய்வமாக நான் பார்க்கின்றேன்.
“நானும் கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்து என் தாயின் சரியான வளர்ப்பால் தான் ஒரு வழக்கறிஞராகவும் இன்று சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளேன்” என அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஒரு தாயால் மட்டுமே சிறந்த மனிதனை உருவாக்க முடியும்; உங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள்; படித்த சமூகமே வாழ்வில் எல்லா வெற்றியையும் பெறும் என்றும் அவர் கூறினார்.
மாற்றங்கள் நமக்குள் உருவானால் நாளைய தலைமுறையினர் இடத்திலும் மாற்றங்கள் உண்டாகும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
120 அன்னையர்களை கெளரவித்த அவ்விழாவில், தாய்மார்களுக்கு பிரகாஷ் சேலைகளையும், அதிர்ஷ்ட குலுக்குக்கான பரிசுகளையும் வழங்கினார்.
சிலாங்கூர் மாநில அரசின் நியமனம் பெற்ற இந்திய கிராமத்து தலைவரான கோபி முயற்சியில் இவ்விழா, இசை நிகழ்ச்சி மற்றும் விருந்துபசரிப்புடன் விமரிசையாக நடைபெற்றது.