
ஜோகூர் பாரு, மே-25 – மக்களுக்கான RON 95 பெட்ரோல் விலையை அரசாங்கம் உயர்த்தாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.
அப்பரிந்துரை இதற்கு முன் அமைச்சரவையில் முன் வைக்கப்பட்டது.
ஆனால் அதற்கு தாம் ஒப்புக் கொள்ளவில்லை என, ஜோகூரில் பி.கே.ஆர் கட்சியின் ஆண்டு பொதுப் பேரவையை முடித்து வைத்து உரையாற்றுகையில் பிரதமர் சொன்னார்.
நேரம் மற்றும் சந்தை விலையைப் பொறுத்து RON 95 பெட்ரோல் விலையை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க முடியும்.
ஆனால், இந்நாட்டில் உள்ள 4 மில்லியன் வெளிநாட்டவர்களுக்கு பெட்ரோல் விலை உயர்த்தப்படும்.
அந்நிய நாட்டவர்கள் மட்டுமே 3 முதல் 4 பில்லியன் ரிங்கிட் வரையிலான பெட்ரோல் மானியத்தை அனுபவிக்கின்றனர்.
ஒருவேளை இனி RON 95 பெட்ரோல் வாங்க வேண்டுமென்றால் அடையாள அட்டையைக் காட்ட வேண்டி வரலாம் என டத்தோ ஸ்ரீ அன்வார் கோடி காட்டினார்.
உலகில் எந்த நாட்டிலும் ஆடம்பரக் கார்களை அடுக்கி வைத்திருக்கும் பணக்கார வர்கத்திற்கு பெட்ரோல் மானியம் வழங்கப்படுவதில்லை என்றார் அவர்.
இவ்வேளையில், எரிவாயு மற்றும் LNG எனப்படும் திரவ இயற்கை எரிவாயு மானியம் குறித்த விவகாரத்தையும் மறுஆய்வு செய்த பிரதமர் உறுதியளித்தார்.
மானிய விவகாரத்தை மக்களிடம் முறையாக தெளிவுப்படுத்துவதில் இன்னமும் பலவீனமாக இருப்பதாக பி.கே.ஆர் உறுப்பினர்களையும் பிரதமர் கடிந்துகொண்டார்.
இதனால் அரசாங்கத்தின் கொள்கை மீது மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்