
பெட்டாலிங் ஜெயா, மே 14- ஜாலூர் ஜெமிலாங் படத்தில் ஏற்பட்ட தவறு குறித்து மன்னிப்பு கேட்கப்பட்ட போதிலும், அதிகாரிகள் விசாரணையைத் தொடர விரும்பினால், திரங்கானு பாஸ் அதற்கு தயாராக இருக்கின்றதென்று திரங்கானு PAS உதவிச் செயலாளர் ஹனாஃபியா மாட் (Hanafiah Mat) கூறியுள்ளார்.
நேற்று திரங்கானு பாஸ், முழு எண்ணிக்கையிலான முனைகள் இல்லாமல், ஜாலூர் ஜெமிலாங் நட்சத்திரத்தைக் கொண்ட TMT 2025 பேரணியின் லோகோ தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து பொது மன்னிப்பு கோரியதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், தேசிய சின்னம் அவமதிக்கப்படும்போதோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்படும்போதோ, மன்னிப்பு மட்டும் போதாது என்றும் மாறாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மசீச இளைஞர் பிரிவு தகவல் தலைவர் நியோவ் சூ சியோங் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சட்டமன்ற உறுப்பினரான ஹனாஃபியா, ஜாலூர் ஜெமிலாங் சர்ச்சையைத் தொடர்ந்து திரங்கானு பாஸ் வாராந்திர கூட்டத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பப் போவதாகக் கூறினார்.