
கோலாலாம்பூர், ஜூன்-24- PTKL2040 எனப்படும் ‘2040 கோலாலம்பூர் உள்ளூர் திட்டத்திற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைக்குமாறு, மேல்தட்டு வர்கத்தினர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தத் திட்டம் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவரப்பட்டபோது, ஏற்கனவே வசதியாகவும் ஆடம்பரத்திலும் வாழ்ந்து வருபவர்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது; அவர்கள் தங்கள் வாழ்க்கை முறை தொந்தரவுக்கு உள்ளாவதை விரும்பவில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்நிலையில், இத்திட்டத்தை இறுதிச் செய்யும்போது, அனைவரையும் அது மகிழ்விக்காது என்பது தவிர்க்க முடியாதது என்றார் அவர்.
மக்கள் வீடமைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கும்போது, அரசாங்கம் எதிர்ப்பை எதிர்கொள்கிறது.
ஆனால் மடானி மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்துவதில் அரசாங்கத்துக்கு அனுபவம் இருப்பதால், அரசின் பரந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு மேல்தட்டு மக்கள் அவர்களின் ஆதரவை வழங்க வேண்டுமென பிரதமர் கேட்டுக்கொண்டார்.
PTKL2040 திட்ட அறிமுக விழாவில் டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.
அத்திட்டம் சிறு வியாபாரிகள் போன்ற ‘செல்வாக்கு’ இல்லாதவர்களின் நலன்களையும் புறக்கணிக்காது என அவர் உத்தரவாதம் அளித்தார்.
PTKL 2040 என்பது கோலாலம்பூரில் வளர்ச்சித் திட்டமிடலைக் கட்டுப்படுத்த மேயரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய சட்டப்பூர்வத் திட்டமாகும்.