புத்ராஜெயா, ஜூன் 10 – இலக்கிடப்பட்ட மானியத் திட்டத்தை அமல்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை, நாட்டை காப்பாற்றவே என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim) வலியுறுத்தியுள்ளார்.
அந்நடவடிக்கை, கடும் விமர்சனங்களுக்கு இலக்காகும் என தாம் அறிந்திருப்பதாக கூறியுள்ள பிரதமர், வேறு வழியில்லாததால், அதனை செயல்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தெளிவுப்படுத்தியுள்ளார்.
“நாட்டை காப்பாற்ற, சில பிரபலம் அற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டியுள்ளது. இலக்கிடப்பட்ட மானிய திட்டத்தை யார் தான் விரும்புவார்கள்? அதனால், பல கடுமையான அவதூறுகளையும், போலி விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதை நாங்கள் அறிந்தே உள்ளோம்” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கிடப்பட்ட மானிய திட்டத்தை அறிமுகப்படுத்த இதற்கு மும் இருந்த பிரதமர்கள் கூட ஒப்புக் கொண்டிருந்தனர். எனினும், அரசியல் ரீதியாக அதனை செயல்படுத்த அவர்கள் விரும்பவில்லை.
தற்போது வேறு வழியில்லாததால், அதனை செயல்படுத்தும் கட்டாயத்திற்கு, தமது அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய போது, பிரதமர் அவ்வாறு சொன்னார்.