
பத்து காஜா, ஜூலை-20-பேராக் பத்து காஜாவில் கோவிலில் உண்டியல் பணத்தையும், சாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலியையும் திருடிச் சென்ற மர்ம நபரைத் தேடும் பணியில் போலீஸ் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஜாலான் தஞ்சோங் துவாலாங்கில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கோவிலில் வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பணத்தையும், சாமி சிலைக்குப் போடப்பட்டிருந்த தாலிச் சங்கிலியையும் ஒரு நபர் திருடிச் சென்றதாகக் கோவில் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காட்சிகள் அடங்கிய CCTV வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்துப் பேசிய பேராக் போலீஸ் தலைவர் டத்தோ Mohd. Alwi Zainal Abidin , இது தொடர்பாக வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், கோவிலின் CCTV காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், பொது மக்கள் யாரும் இது குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தையோ அல்லது விசாரணை அதிகாரிகளையோ தொடர்பு கொண்டு உதவலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



