
கனோவிட், மே-9-மலேசியாவின் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக சரவாக் மாநிலம் மீண்டும் ஒருமுறை பாராட்டைப் பெற்றுள்ளது.
இன நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு முன்மாதிரி மாநிலமாக சரவாக்கை தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் வருணித்துள்ளார்.
நேற்று கனோவிட் (Kanowit) கலாச்சார விழாவைத் தொடக்கி வைத்துப் பேசிய அமைச்சர், 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய ஒற்றுமை குறியீட்டில் (IPNas) சரவாக் 0.791 புள்ளிகளுடன் நாட்டின் மிக உயர்ந்த மதிப்பெண்ணைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த வெற்றிக்கு அங்குள்ள மக்களின் ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதையே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
மே 31-ஆம் தேதி வரை இந்த கனோவிட் கலாச்சார விழா நடைபெறுகிறது.
முன்னதாக, Niti Daun ஊர்வலத்தில் டத்தோ ஏரன் கலந்து கொண்டார்.
இதில் இபான், மலாய், சீனர், பிடாயூ மற்றும் ஓராங் உலு சமூகங்களைப் பிரதிநிதித்து 36 குழுக்கள் தங்களின் பாரம்பரிய உடைகள் மற்றும் நடனங்களுடன் அணிவகுத்து நின்றன.
இந்தக் கலாச்சார விழா, சரவாக் சுற்றுலா வாரியத்தின் அதிகாரப்பூர்வ அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்று டத்தோ ஏரன் விருப்பம் தெரிவித்தார்.
இத்தகைய நிகழ்வுகள் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தேசிய அளவில் ஒற்றுமையை வலுப்படுத்தவும் உதவும் என்றார் அவர்.



