
கோலாலம்பூர், மே 19 – புக்கிட் பிந்தாங் (Bukit Bintang) பகுதியில் சாலையின் நடுவில் வாகனத்தின் மீது தீபந்தம் ஏற்றி ஆபத்தான விளம்பர காட்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக, ஆடை கடை உரிமையாளர் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டாங் வாங்கி (Dang Wangi) மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி சசாலீ அடாம் (ACP Sazalee Adam) கூறுகையில், 17 முதல் 30 வயதிற்குட்பட்ட 14 ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவில், சிலர் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் (Jalan Sultan Ismail) சாலையில் ஆபத்தான முறையில் தீபந்தத்தை ஏற்றி கொண்டாடிய காட்சி பதிவாகியிருந்தது.
போலீஸ் விசாரணையில், இது டெங்கில் (Dengkil) பகுதியில் செயல்படும் ஒரு ஆடை கடையின் விற்பனை விளம்பரத்திற்காக செய்யப்பட்ட காட்சி என்பது தெரியவந்தது.
24 வயதுடைய கடை உரிமையாளர், கடை ஊழியர்கள் மற்றும் பணம் வழங்கப்பட்ட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காட்சியில் பங்கேற்றவர்களுக்கு 50 முதல் 700 ரிங்கிட் வரை ஊதியம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



